எனது மகன் மற்றும் மனைவி ஆகியோர் உயிருடன் இருக்கின்றனர். அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசையின் மூத்த சகோதரன் தில்லையம்பலம் தவராசா கேட்டுள்ளார்.கற்றறிந்த பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் அமர்வு நேற்றைய தினம் நெல்லியடி முருகையன் ஆலய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கேட்டார்.
2006ம் ஆண்டு தம்பியை பார்க்கச்சென்றபோது பாதை முடப்பட்டதால் நாங்கள் அங்கேயே தங்கிக்கொண்டோம். மகன் அங்கு படித்துக்கொண்டிருந்தார். யுத்தம் தீவிரம் பெற்ற காலத்தில் இரட்டைவாய்க்காலில் இருந்து பருத்தித்துறை நோக்கி படகில் வந்து கொண்டிருந்த போது கடற்படையினரால் அவர்கள் பிடிக்கப்பட்டனர்.
அந்த படகில் போதியளவு இடம் இல்லாததால் நான் பாதையால் மக்களோடு வந்து முகாமிலிருந்து தற்போதுதான் வந்துள்ளேன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் எனது மனைவி பேசினால் தாங்கள் இந்த இடத்தில் இருப்பதாகவும் தங்களைத் தேடவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். நான் அங்கே போவதற்கு முயற்சித்தேன் ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றார்.
மேலும் தனது மனைவி சந்திராதேவிக்கு 59 வயது எனவும் மகன் சிலம்பரசனுக்கு 16 வயது எனவும் சாட்சியமளித்தார். முழுமையான தகவல்களை எழுத்து முலம் ஆணைக்குழு பெற்றுக்கொண்டது.

home
Home
கருத்துரையிடுக