இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான அறிக்கை இராஜாங்கத் திணைக்களத்தால் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், பணிகள் முடியாத காரணத்தால் திட்டமிட்டபடி அதனை நேற்று தாக்கல் செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் விரிவான தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், அறிக்கை தொடர்பில் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் பணியாற்றி வருவதால் திட்டமிட்டபடி அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டது என திணைக்களப் பேச்சாளர் இயன் கெலி இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் என்ன உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பாக தன்னிடம் எந்த விபரமும் இல்லை எனவும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் இந்த அறிக்கை இலங்கை போர் தொடர்பான உண்மை நிலவரத்தை ஒரளவிற்கு வெளியே கொண்டுவரும் என மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் இவர்கள் அமெரிக்க அறிக்கை அது தொடர்பில் பலமான ஆதாரமாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சிறிலங்கா அரசையும் கடும் சீற்றத்திற்கு உள்ளாக்கி இருந்தது.
இலங்கை தொடர்பாக அத்தகைய அறிக்கை எதனையும் வெளியிடும் தகுதி அமெரிக்காவிற்கு இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடும் தொனியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இத்தனைக்கும் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச அரச தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பல வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்தவர்.
home



Home
கருத்துரையிடுக