
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை போர்க் குற்றம் தொடர்பில் உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்ய அங்குள்ள தமிழ் அமைப்பொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோத்தபாய ராஜபக்ஷ சில தினங்கள் தங்கிருக்கும் நோக்கில், வோசிங்டன் சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்ஷவும், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் துபாயில் இருந்து நியூயோர்க் சென்ற விமானத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் பயணித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் நிதியத்தின் உத்தியோபூர்வ பணிக்காகவும், அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் அமெரிக்க சென்றனர். எனினும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எதற்காக அமெரிக்க சென்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் நேற்று முன்தினம் நடத்திய இராபேசனத்திலும் கோத்தபாய கலந்துகொண்டுள்ளார். எனினும் அவர் இது வரை இலங்கை அரசாங்கம் சார்பிலான உத்தியோபூர்வ பணிகள் எதிலும் ஈடுபடவில்லை. எவ்வாறாயினும் கே.பி என்ற குமரன் பத்மநாதனினால் வெளியிடப்பட்டுள்ள வங்கி கணக்குகள் பற்றித் தேடிப்பார்க்கும் நோக்கில் கோத்தபாய அமெரிக்க சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அவர் இன்னும் சில தினங்களில் நாடு திரும்புவார் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கருத்துரையிடுக