செங்கல்பட்டு காந்திபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் இன்று 5வது நாளாகவும் தொடர்கிறது.
இச்சிறையில் ஈழத்தை சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 45 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டனர். ஆனால் 45 நாட்கள் கடந்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஈழ கைதிகள் 10 பேர் கடந்த 15 ந்திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள்.
இன்று 5வது நாளாக உண்ணாவிரதம் நீடிக்கிறது. இதில் பிஷ்பி, சதீஷ்குமார் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். நாங்கள் நிரபராதிகள். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர்கள் கூறினார்கள்.
கருத்துரையிடுக