
2011ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காதது ஏன் என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “வரவுசெலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்தது.
நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அதிபர் சமர்ப்பித்த வரவுசெலவு திட்டமானது தமிழ் மக்களுக்கு குறிப்பாக இடம்பெயர்ந்து இன்னலுற்றிருக்கும் மக்களுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை.
இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவது தான் தமது முன்னுரிமையென அரசாங்கம் கூறி வருகின்றது.
ஆனால் வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளில் அரசாங்கத்தின் இந்தக் கூற்று எந்தவித்திலும் பிரதிபலிக்கவில்லை.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த எமது மக்கள் பல வருடங்களாக தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து சொல்லொணாத் துன்ப நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்களின் மீள்குடியேற்றம் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் அதி முக்கிய கடமையாகும்.
வரவுசெலவு திட்டத்திலும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு வேலைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்கள் எதுவும் இல்லை.
இந்த வரவு செலவு திட்டம் அந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறியுள்ளது.
இதற்கு மேலாக பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு போர் முடிவடைந்த பின்னரும் ஆண்டாண்டு கூடிக் கொண்டே செல்கின்றது.
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான நாம் இவற்றை ஆராய்ந்து பார்த்த போது இந்த வரவுசெலவு திட்டத்தை எந்த அடிப்படையிலும் ஆதரிக்க முடியாது என்பதே எமது உறுதியான தீர்மானமாக இருந்தது.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரவுசெலவுத் திட்டத்தைக் கண்டித்துப் பேசியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கொடுக்காத இந்த வரவுசெலவுத் திட்டத்தை நாம் ஆதரிக்க முடியாது என்பது எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது.
தமிழ் மக்களின் உடனடி மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற அதி முக்கிய விடயங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்பதை நாம் ஆரம்ப காலம் தொடக்கம் வலியுறுத்தி வந்துள்ளோம்.
ஆனால் இதுவரை அரசாங்கத் தரப்பிலிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
சிறிலங்கா அரசாங்கம் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற எமது எண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது“ என்று தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக