News Update :
Home » » சிறிலங்காவுக்கான பயணத்தைக் கைவிட்டார் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்காவுக்கான பயணத்தைக் கைவிட்டார் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர்

Penulis : Antony on வெள்ளி, 17 டிசம்பர், 2010 | PM 2:39

பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை பிற்போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் நினைவுப் பேருரையாற்றுவதற்கு லியம் பொக்ஸ் அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்காக அவர் சிறிலங்காவுக்கு தனிப்பட்ட பயணமாக இந்த வாரம் வரவிருந்தார்.

ஆனால் பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் தனது பயணத்தை இறுதி நேரத்தில் பிற்போட்டுள்ளதாக நேற்று பின்னிரவில் பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

அடுத்த ஆண்டில் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளும் போது லக்ஸ்மன் கதிர்காமர் நினைவுப் பேருரையை நிகழ்த்த அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு பிரத்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் ஆலோசனை கூறியிருந்தார்.

அத்துடன் அவர் லியம் பொக்ஸ் சிறிலங்காவுக்கான பயணத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரித்தானியப் பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்றும் நேற்று கூறியிருந்தார்.

தற்போதைய நிலையில் லியம் பொக்ஸ் கொழும்பு செல்வது சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியா கொண்டுள்ள நிலைப்பாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.

பிரித்தானிய அரசின் அழுத்தங்களை அடுத்தே லியம் பொக்ஸ் சிறிலங்காவுக்கான பயணத்தை பிற்போட்டுள்ளார்.

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்ட விவகாரத்தை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்றன.

போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger