News Update :
Home » » யாழ். குற்றச்செயல்களின் பின்னணியில் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருக்கலாம் என்கிறார் வீரவன்ச

யாழ். குற்றச்செயல்களின் பின்னணியில் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருக்கலாம் என்கிறார் வீரவன்ச

Penulis : Antony on வெள்ளி, 7 ஜனவரி, 2011 | PM 1:50

யாழ்.குடாநாட்டு குற்றச் செயல்களின் பின்னணியில் சமாதானத்தை விரும்பாத தமிழ்க் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் இருக்கலாமென அமைச்சர் விமல் வீரவன்ச சந்தேகம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னால் அரசாங்கம் இருப்பது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த சிலர் முனைகின்றனர். இது ஒருபோதும் வெற்றியளிக்காது. புனர்வாழ்வு பெற்று விடுதலையானவர்களே இந்தப் பின்னணியில் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகம் கொள்கின்றனர். அத்துடன் அங்குள்ள பாதாளக் குழுக்களும் இதனுடன் தொடர்புபட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமரைக் கொலை செய்ய புலிகள் முயற்சிப்பதாக அந்த நாடு கூறுகின்றது. எனவே புலிகளின் செயற்பாடுகள் இல்லையெனக் கூறி விடமுடியாது. அத்துடன் இயல்பு நிலையைக் குழப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் கூட இவ்வாறான செயல்களில் ஈடுபடமுடியும். ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகள் இதில் ஈடுபட்டிருக்கலாம்.

குடாநாட்டு குற்றச்செயல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பும் சிலர் அவசர காலச்சட்டத்தை தேவையில்லையென்று கூறி எதிர்த்து வாக்களிக்கின்றனர். எம்மைப் பொறுத்தவரை தற்போதுள்ள இந்தச் சட்டம் போதுமானதல்ல. இன்னமும் அது கடுமையானதாக்கப்படவேண்டும். அப்போதுதான் இவ்வாறான செயல்களைக் கட்டுப்படுத்தமுடியும்.

அரசுக்கு இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதற்கு எந்தத் தேவையும் இல்லை. தேர்தல் வரும் நிலையில் அரசு இப்படிச் செயற்படுமா? ஜனாதிபதி கூறித்தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட பாராளுமன்றத்தில் யாழ்.குடாநாட்டு நிலைமை தொடர்பில் அறிக்கை விட்டார்.

அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காகவே ஜனாதிபதி அறிக்கை விடுமாறு கூறினார். அந்தளவுக்கு இது விடயத்தில் அரசு அக்கறையுடன் இருக்கின்றது.

வடக்கு மக்களை இனவாத ரீதியில் உசுப்பிவிட்டு உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்தத் திட்டமிட்ட செயல்கள் இடம்பெறுகின்றன.

பிரதம நீதியரசர் தொடர்பில் பொய்யான தகவல்களை புலிச்சார்ப்பு ஊடகங்கள் மூலம் வெளியிட்டும் பாரிய குற்றச்செயல்கள் இடம்பெறுவது போல் காட்டியும் தமது தேவைகளை நிறைவேற்ற சிலர் முயற்சிக்கின்றனர். இதன் மூலம் வக்கிரமான சந்தோஷத்தை அடைய முயற்சிக்க வேண்டாமென்றார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger