News Update :
Home » » யாழ்.குடாநாட்டு வன்முறைகள் அரசின் திட்டமிட்ட கட்டவிழ்ப்பு

யாழ்.குடாநாட்டு வன்முறைகள் அரசின் திட்டமிட்ட கட்டவிழ்ப்பு

Penulis : Antony on சனி, 8 ஜனவரி, 2011 | AM 4:52

வீதியின் முனையில் யாராவது ஒரு அப்பாவித் தமிழ்மகனை சிங்கள இராணுவம் சுட்டுக்கொன்றால் ஏற்படுவதைவிட அதிகமான பதட்டமும், பீதியும், படபடப்பும் நேற்று முந்தநாள் காணாமல் போனவர் ஏதோ ஒரு பாழ்கிணற்றுக்குள் சடலமாக மிதக்கும் போதினில் ஏற்பட்டுவிடுகிறது.
மரணம் என்பது அதன் கோரத்தை விடவும் அது ஏற்படுத்தும் விடைகள் இல்லாத கேள்விகளாலும், எதற்காக, யாரால், எப்படி என்ற வினாக்களாலும் இன்னும் பீதியுடன் நோக்கப்படும் ஒரு முழு அச்சநிலையே இப்போது யாழ் எங்கும் விரித்துப் போடப்பட்டுள்ளது.

முகநூலில் சுற்றுப்புறசூழல் பற்றி அக்கறையுடன் எழுதிப் படம் போட்ட இளைஞன்,
கோவிலில் கடவுளுக்கு ஆராதனை, அர்ச்சனை செய்து வீடுதிரும்பும் மதகுரு,
சமூகத்தின் உயிர்நாடியான கல்விக்கட்டமைப்பின் முக்கிய உத்தியோகத்தர்,
ஆட்டோ சாரதி,
முதியபெண்மணி

என சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ளவர்கள் கடத்தப்படுவதும், வீடுபுகுந்து குடும்பத்தினர் முன்னிலையில் இழுத்துச்சென்று கொல்லப்படுவதும், இன்றைய யாழ் குடாநாட்டை ஒரு கரும்இருள்போலவே மரணப்பீதியும் போர்த்து நிற்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு அங்குள்ள அனைவரினதும் மனநிலை மிகவும் உடைந்தும், சோர்ந்தும்,அச்சத்துக்குள்ளும் உறைந்து நிற்கிறது.

அடுத்தது யார், அவனா, இல்லை இவனா இல்லை நானா என்ற அச்சமே அவர்களை உயிருடன் உலாவும் பிணங்களாகவே ஆக்கிவிடுகிறது. இந்த அச்சம் எப்போதும் இருக்கவேண்டும் என்ற விருப்பம் யாருடையது.?

எழுச்சியின் எதிர்மறை அச்சம்தான். அச்சத்துக்குள் வாழும் ஒரு நிலையை அல்லது தோற்றத்தை ஏற்படுத்தி விடுவதுதான் இத்தகைய கொலைகளினதும், கொள்ளைகளினதும், காணாமல் போதல்களினதும் நோக்கங்களாக இருக்கும்.

எல்லாம் முடிந்துவிட்டதாக அவர்கள்தான் அறிவித்து வெற்றி விழாக்களும், வெற்றிப் பிரகடனங்களும் செய்துவிட்டார்கள். சிங்கள பேரினவாதம் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மிகமோசமாக பின்வாங்க வைத்துவிட்டது என்பது கசப்பானதுதான் என்றாலும் அதுவே உண்மையும் ஆகும்.

ஆனாலும், இதுவே இறுதியான முயற்சி என்றும் இனி விடுதலைக்கான தமிழர்களின் விருப்பு, தேடல் எல்லாம் தொலைந்துவிடும் என்றும் சிங்களம் கனவுகளுக்குள் தலைபுதைத்து நின்றுவிடவில்லை. அவர்கள் ஒரு யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டாலும் அவர்களின் அச்சம் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இந்த அச்ச நீடிப்பு என்பது சிங்களத்தின் ஆழ்வேர்களுக்குள் காலகாலமாக நீடிக்கும் ஒரு குணாதிசயங்களில் ஒன்று.

நான்கு பக்கமும் கடல்,இன்னொரு பக்கம் தமிழ்மன்னன்’ என்று குறுகிப்படுத்திருந்த துட்டகைமுனுக் கதைகள் அவர்களின் சிங்கள இதிகாசத்தில் நிறைய இருக்கின்றன. வென்றாலும் தோற்றாலும் அந்த அச்சஉணர்வு ஒருபோதும் அற்றுப்போய்விடமாட்டாது.

சிலவேளைகளில் அது கூடும், சிலபொழுதில் அது குறையும். அவர்களின் அச்சம் அதிகரிக்கும்போது தமிழர்களின் மீதான கொலைகளையும், கடத்தல்களையும் அடையாளம் தெரியாத கும்பல்களுக்கூடாக செய்விப்பார்கள்.

அனாதரவான சடலங்களை தமிழர்களின் வீதிகளிலும், பற்றைகளுக்குள்ளும், பாழ்கிணறுகளுக்குள்ளும் வீசி எறிந்து மோசமான பய உணர்வை தமிழர்களின் தினசரி வாழ்வுக்குள் திணிப்பார்கள்.

திகிலும், பயமும், நிச்சயமற்றதுமான வாழ்வினுள் தமிழர்களை தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம்தான் சிங்களபேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு ஆட்சியை தொடர்ந்து நீடிக்கமுடியும் என்பதுதான் வடக்கு-கிழக்குக்கான சிங்களத்தின் பரிபாலனமுறை.

இதுதான் இப்போது யாழ் குடாநாட்டில் தலைக்கவசம் அணிந்த மோட்டார்சைக்கிள் கும்பல்களாலும், இரவுநேர திருட்டுக்கும்பல் போன்ற குழுக்களாலும் அமுல்நடாத்தப்படுகின்றது.

இவை வெறுமனே பொருட்களை திருடுவதற்கும், சொத்துக்களை கொள்ளையடிப்பதற்குமான முயற்சிகள் என்ற பாவனையில் நிகழ்த்தப்பட்டாலும் மிகத் துல்லியமான திட்டமிடுதலுக்கூடாக நிகழ்தப்படும் வன்முறைகளே ஆகும்.

சிங்கள ஆட்சியின் கொடூரங்களையும், அடக்குமுறையையும் விமர்சிப்பவர்களே மிக அதிகமாக கடத்தப்பட்டும்,கண்ணை கட்டி கொல்லப்பட்டும், நடுநிசியில் வீடுபுகுந்து சுட்டுக்கொல்லப்பட்டவர்களும் ஆவர்.

சிங்கமொழியில் மட்டுமே தேசியகீதம் என்ற கட்டளையை விமர்சித்த கல்விஅதிகாரி, மணல்கொள்ளையை எதிர்த்து புகைப்படம் வெளியிட்ட இளைஞன், பௌத்தவிகாரை சம்பந்தமாக எதிர்ப்புக்குரல் கொடுத்த ஆட்டோசாரதி என நீண்டு செல்லும் இந்த பட்டியல்.

அத்துடன் சிங்களவியாபாரிகள் யாழ்குடாவில் செய்யும் வியாபாரத்துக்கு போட்டியான தமிழ் வர்த்தகர்களும் இந்த கொலைப்பட்டியலில் அடிக்கடி தொலைந்துகொண்டே போகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் நடாத்திக்கொண்டு இவற்றை வேறுயாரோ ஒரு மூன்றாம் தரப்புக்குழுதான் நிகழ்த்துவதுபோலவே அரசாங்கமும், அதன் எடுபிடி அமைச்சர் டக்கிளசும் அறிக்கைகளையும், பாராளுமன்ற உரைகளையும் விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எத்தனை கொலைகள், கொள்ளைகள், வல்லுறவுகள் நடந்தாலும் ஊடகங்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி அச்சுறுத்தலுடன்கூடிய வேண்டுகோள்களை வெளியிட்டுக்கொண்டு இருக்க, யாழ்குடாவில் இடம்பெறும் சம்பவங்களுக்கு பாதுகாப்புத்தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டக்ளஸ் கேட்டுள்ளார்.

இதன்மூலம் பாதுகாப்புத் தரப்பினருக்கு தெரியாமலேயே இந்தச் சம்பவங்கள் நடைபெறுவது போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்க அந்த அடிவருடி நினைக்கிறார். இன்னொரு புறத்தில் சிங்கள அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளுக்கு அள்ளிக்கொடுக்கும் நிதித் திட்டமிடல்களை உள்ளடக்கிய வரவுசெலவு திட்டத்தை எதிர்க்காமல் ஒத்துழைப்பு அரசியல் நடாத்தும் கூட்டமைப்பினர் இந்த கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும், வல்லுறவுகளுக்கும் எதிராக குரல்கொடுக்காமல் பாராளுமன்றத்தில் இவை பற்றி பேசுவதற்கு உரிமை கேட்பதிலேயே பொழுதையும், பிரதிநிதித்துவத்தையும் செலவு செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையில் இந்த கொலை கொள்ளைகளுக்கும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி கசியவிடப்பட்டு, விடுதலையான முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் மீளவும் விசாரிக்கப்படுகிறார்கள்.

இனிமேல் தமிழர் மத்தியில் இருந்து எழும் எந்தவொரு எதிர்ப்புக்குரலும் உடனடியாகவே அழித்து எறிந்துவிடப்படும். அந்த பழியை இலகுவாக சுமத்திக்கொள்வதற்காக இரண்டு குழுக்களை அரசாங்கமும், சிங்கள ஊடகங்களும் இப்போது உருவாக்கி வைத்திருக்கின்றன.

ஒன்றில் ‘முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள்’ மீதோ அல்லது ‘மாத்தையா குழு’ வின் மீதோ போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளும் நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்ககூடும்.

இப்போது யாழ்குடாவில் நடந்தேறும் கொலை, கொள்ளை, வல்லுறவு சம்பவங்கள் மீளவும் இன்னுமொரு ஆயுதப்போராட்டத்தை ஏற்படுத்தும் என்று சிங்களதேசத்தின் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி முதல் மக்கள் விடுதலை முன்னணி வரையும் அரசுக்கு எச்சரிக்கும் தோரணையில் சொல்லி நிற்கிறார்கள்.

சிங்கள இராணுவத்துடன் இரவுநேர கேளிக்கைகளிலும், மேடைப்பாடல்களிலும், ஆடல்களிலும் கவனம் குவிந்துபோன கருணாகூட ‘யாழ் நிலைமை மீளவும் விடுதலைப்புலிகளுக்கு உயிர் கொடுத்து, ஆயுதப்போராட்டம் மீண்டும் தோன்ற வழிசெய்துவிடும்’ என எச்சரிக்கும் அளவுக்கு யாழ் நிலைமை உள்ளதென்பதே உண்மை.

இவர்கள் எல்லோரும் கோருகிறார்கள் என்பதற்காக இராணுவம் இனிமேல்த்தான் இதனுடன் சம்பந்தப்பட்டவர்களை தேடித் திரியப்போகின்றது போல இருக்கிறது. இராணுவத்தை தொடர்ந்து நிலைகொள்ள வைப்பதற்கும் இன்றைய யாழ். சம்பவங்களை அரசாங்கம் செய்திருக்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

யாழ்.குடாநாட்டில் நித்தமும் நடைபெறும் சம்பவங்கள் அரசாங்கத்தால் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறை அரசியலின் இன்னொரு கோரமுகமாகும்.

அங்குள்ள சாதாரண மக்களால் இவற்றுக்கு எதிராக போராடவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் முடியாத சூழல்தான் அங்கு நிலவுகிறது. புலம்பெயர் அமைப்புகளும் தனி நபர்களும் வடக்கு-கிழக்கில் நிலவும் அச்சமூட்டும் மரணச்சூழலை உலகின் கவனத்துக்கு கொண்டுவரும் செயற்பாடுகளை தீவிரமாக்குவதன் மூலமே இப்போதைக்கு தற்காலிகமாகவேனும் இந்த படுகொலைகளையும், காணாமல் போதல்களையும் தடுத்துநிறுத்த முடியும்.

ச.ச.முத்து
ilamparavai@hotmail.com
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger