News Update :

மக்கள் பணத்தைச் சூறையாடும் பெருச்சாளிகளை நடவடிக்கை எடுப்பாரா ஜனாதிபதி

Penulis : ۞உழவன்۞ on சனி, 11 பிப்ரவரி, 2012 | 12:47 AM

சனி, 11 பிப்ரவரி, 2012

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாண வருகையையொட்டி வடக்கில் பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டிருக்கிறது. கொழும்பில் இருந்து வந்த ஜனாதிபதியின் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களை ஒரு வாரத்துக்கு முன்னரே பொறுப்பெடுத்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்திக் கொண்டனர்.




அதேபோன்று இலங்கை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது அவரது மனம் மகிழும் வகையில் அவருக்கு "கட்டவுட்" வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. (யார் தீர்மானித்தார்கள் என்பது புரியாததாகவே இருக்கிறது).



ஜனாதிபதியின் வருகை திடீர் எனத் திட்டமிடப்பட்டதாலோ அல்லது சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான அங்கஜனுக்கு 9ஆம் திகதி திருமணம் என்பதாலோ தெரியாது சுதந்திரக் கட்சியினர் இம்முறை இந்தக் "கட்டவுட்" வைப்பதில் மும்முரம் காட்டியதாகத் தெரியவில்லை. கடந்த முறை மஹிந்த யாழ்ப்பாணம் வந்தபோது "கட்டவுட்" வைப்பதில் ஆர்வம் காட்டிய அமைச்சர் டக்ளஸின் ஆதரவாளர்களும் இம்முறை அதில் ஆர்வம் காட்டவில்லை.



ஆனால், கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் மஹிந்த ராஜபக்ஷ பயணம் செய்யும் பாதைகளில் திடீரென "கட்டவுட்"கள் முளைத்தன. வேறு எந்த அரசியல் பிரமுகரது படங்களையும் தாங்கியிராத இந்தக் "கட்டவுட்"கள் ஆர்வத்தைத் தூண்டின.



விசாரித்ததில் சில தனியார் நிறுவனங்களிடம் இலங்கை ஜனாதிபதிக்குக் "கட்டவுட்" மற்றும் "பானர்" வைப்பதற்காகப் பணம் திரட்டப்பட்டதாகத் தெரியவந்தது. வேறு சில நிறுவனங்கள் "கட்டவுட்" மற்றும் "பானர்" களைத் தாமே செய்து வழங்கியுமிருந்தன. ஆனால், திவிநெகும என்ற திட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட விளம்பர "கட்டவுட்" பெரிதாக மூலையில் வெள்ளைத் தாமரைப் பூவுடன் காணப்பட்ட இந்த "கட்டவுட்" யாரால் வைக்கப்பட்டது என்ற விவரம் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.



இது ஆவலை இன்னும் தூண்ட, கிளற ஆரம்பிதோம். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக சுமார் 30 லட்சம் ரூபா பணத்தில் மிகச் சாதாரணமாகத் தில்லுமுல்லு இடம்பெற்றமை தெரியவந்தது.



கட்டவுட் தில்லுமுல்லு

வைக்கப்பட்டுள்ள "கட்டவுட்"களில் இரு வகையானவை கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து பொருத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் செய்து பொருத்தப்பட்டால் ஏற்படக்கூடிய செலவிலும் பார்க்க 4 மடங்கு பணம் இதற்காகச் செலவிடப்பட்டுள்ளது என்பது எமது விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.



6' * 8' அளவிலான, மஹிந்த ராஜபக்ஷவின் தனிப் படம் போட்டு "நீடுழி வாழ்க'' என்று எழுதப்பட்ட "கட்டவுட்" ஒன்றை யாழ்ப்பாணத்தில் செய்வதற்கு அதிகபட்சமாக 20,000 ரூபா செலவாகும் என "உதயன்" எடுத்த கேள்வி கோரலில் இருந்து தெரிகிறது. ஆனால், கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட இந்த "கட்டவுட்"களுக்கு அதைப்போல நான்கு மடங்குக்கு மேற்பட்ட பணம் செலவிடப்படுகிறது என்பதை எம்மால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.




மோசடியின் அளவு

அதாவது ஒரு "கட்டவுட்" செய்வதற்கு சுமார் 60,000 ரூபா மேலதிகமாகச் செலவிடப்படுகிறது. இதுபோன்று 25 "கட்டவுட்" கள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 15 லட்சம் ரூபா நிதி மேலதிகமாகச் செலவிடப்படுகிறது.

உள்ளூரில் மிகக் குறைந்த செலவில் இத்தகைய வேறு "கட்டவுட்" கள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏன் இவ்வளவு அநியாயச் செலவில் கொழும்பு நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது?



மேலும் சில கட்டவுட்



இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னர்...

இந்தக் "கட்டவுட்"களைச் செய்தது எஸ்.என்.கே. ஹோல்டிங்ஸ் என்ற கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றே. இதே நிறுவனம் 10' * 6' என்ற அளவிலான "திவிநெகும" கட்டவுட்களையும் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோரின் படங்களுடன் நகரில் நிறுவியுள்ளது.



இந்த அளவிலான "கட்டவுட்"களை யாழ்ப்பாணத்தில் செய்வதாயின் அதிக பட்சமாக 25,000 ரூபாவாகும் என உதயன் பெற்ற கேள்விக் கட்டளைகள் காட்டுகின்றன. ஆனால், அதே "கட்டவுட்"களும் சுமார் மூன்றரை மடங்கு அதிக பணம் கொடுத்தே செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலும் சுமார் 15 லட்சம் ரூபா மேலதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது.



யார் கொடுத்த காசு

இந்த "கட்டவுட்"களுக்கான ஒரு தொகுதி பணம் வடமாகாண விவசாய அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நிவிநெகும" திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அந்தத் திட்டம் தொடர்பான "கட்டவுட்"கள் செய்யப்பட்டன என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக அவை செய்யப்படவில்லை என்றும் உதயனுக்குத் தெரிவித்தார்.



இந்த திட்டம் மற்றும் நிதிக் கொடுப்பனவுகள் குறித்து வடக்கு மாகாண பிரதம செயலருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, ஜனாதிபதியின் பயணம் பற்றிய ஏற்பாடுகள் மத்திய அரசைச் சேர்ந்தவை என்ற காரணத்தால் அது குறித்துத் தமக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினார்.



ஜனாதிபதியின் "கட்டவுட்"கள் தொடர்பாக தனக்குத் தெரிந்தவரை மாகாண அமைச்சுக்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவற்றுக்காக நிதிப் பரிமாறல்கள் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். ஆளுநரின் செயலாளர் மற்றும் வடமாகாண திறைசேரிச் செயலர் ஆகியோரைத் தொடர்பு கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் சாத்தியப்படாததால் அவர்களின் கருத்துக்களை அறியமுடியவில்லை



சூத்திரதாரி யார்?

அவரது இந்தப் பதில் ஆர்வத்தைத் இன்னும் தூண்டியதால் இந்த வியாபார ஒப்பந்தத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை நாம் துருவினோம். கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளித்தன.



இந்தக் "கட்டவுட்"களுக்கான பணத்தை வடமாகாண விவசாய அமைச்சின் ஊடாகக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது தொடர்பான கேள்வி கோரல்களை அமைச்சு வெளியிட்டிருக்கவில்லை என்பதும் அமைச்சின் செயலருக்கு முகவரியிடப்பட்டு அந்தக் கேள்வி கோரல்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்றும் உதயனுக்கு உறுதியாகத் தெரியவந்தது.



இது பொது நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கான அரசின் விதி முறைகளுக்கு மாறானது என்பதை மாவட்டத்திலுள்ள அரச உயர் அதிகாரிகள் உதயனுக்கு உறுதிப்படுத்தினார்கள்.



எல்லாம் தில்லுமுல்லு

எஸ்.என்.கே. நிறுவனத்தை தொடர்பு கொண்டு இவ்வாறான "கட்அவுட்"கள் செய்ய வேண்டியிருப்பதால் அவற்றுக்கான கேள்வி கோரல்கள் தேவை என்று கேட்டோம். முதலில் எம்முடன் நன்றாகவும் நட்பாகவும் பேசிய நிறுவனப் பிரதிநிதி, "நாங்கள்தான் வடக்கில் அதிகம் அரசின் வேலைகள் எல்லாம் செய்கிறோம். உங்களுக்கும் சிறப்பாகச் செய்து தரலாம். நீங்கள் வேறு இடங்களில் கேட்கத் தேவையில்லை நாங்களே மூன்று கேள்வி கோரல்களை அனுப்பி வைக்கிறோம். எங்களிடம் அத்தகைய நிறுவனங்கள் இருக்கின்றன'' என்றார்.



சரி எனக்கூறி எமது "பக்ஸ்" இலக்கத்தைக் கொடுத்து அவற்றை அனுப்பி வைக்கும்படி நாம் கோரினோம். ஆனால், சிறிது நேரத்தில் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய அவர் "நீங்கள் மீடியாவைச் சேர்ந்தவர்களா?'' என்று கேட்டார். "ஆம்!'' என்றதும் திட்ட ஆரம்பித்தார். பின்னர் ஒருபோதும் எமக்கு "பக்ஸ்" வரவேயில்லை.



பின்னணி யார்?

"பக்ஸ்" எண்ணை வைத்து இது உதயன் பத்திரிகை என்பதையும் இவர்களுக்கு "பக்ஸ்" அனுப்புவது ஆபத்தானது என்பதையும் அவ்வளவு விரைவாக அந்த நிறுவனம் எப்படி அறிந்து கொண்டது என்பதை கிளறத் தொடங்கினோம். அப்போது மேலும் சில விவரங்கள் கிடைத்தன.



வடமாகாண விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் இந்த விவகாரங்களுக்கும் இடையிலான தொடர்பு அப்போதான் அம்பலமானது.

அவர், அனுராதபுரத்தில் நீண்டகாலம் வாழ்ந்த ஒருவர். நன்றாகச் சிங்களம் பேசக்கூடியவர். எழுதுவினைஞராக உள்ளார்.



வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு வழங்கப்பட்ட நெறிப்படுத்தல்களின் அடிப்படையிலேயே இந்த ஒப்பந்த விவகாரம் நகர்த்தப்பட்டுள்ளது.

வடமகாண ஆளுநர் அலுவலகத்தில் உள்ள சிங்களம் மட்டும் பேசக்கூடிய, சிவில் சேவையைச் சேராத அதிகாரி ஒருவரே இந்த எழுதுவினைஞரை நெறிப்படுத்துகிறார்.

இவர் மூலமாக அனுப்பப்பட்ட கேள்வி கோரல்களில் எஸ்.என்.கே. கோல்டிங்ஸ் நிறுவனத்தின் கோரலை ஏற்குமாறு உயரதிகாரிகளுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.



ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வந்த நெறிப்படுத்தல் என்பதால் அதனைச் சிரமேற்கொண்டு அதிகாரிகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இப்போது கேள்வி ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அலுவலகக் கோவைக்கான பணிகள் வழக்கமான முறைமைக்குத் தலைகீழாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் உதயன் உறுதிப்படுத்தியிருக்கிறது.



ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஒரு இளநிலை அலுவலர் மூலம் நெறிப்படுத்தல்கள் வழங்கப்படுவது குறித்து அமைச்சில் யாரும் கேள்வி கேட்பதில்லை. கேட்டு வேலைக்கு ஏன் வேட்டு வைக்க வேண்டும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.



அவர்கள் என்னவாவது செய்துவிட்டுப் போகட்டும். அது பற்றிக் கவலையில்லை. அது அவர்களின் பதவி நிலைகள் பற்றிய பிரச்சினை. எங்களின் கேள்விகள் எல்லாம் அமைச்சுக்கள் ஊடாக மக்களின் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதியை இப்படித் தில்லுமுல்லு செய்து கட்சி அரசியலுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தாமல் இந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்? அப்படியானால் இந்த ஊழலில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதுதானே அர்த்தம்?




நடவடிக்கை எடுப்பாரா ஜனாதிபதி



இப்படிப்பட்ட ஒரு சின்ன "கட்டவுட்" வைக்கும் திட்டத்தின் மூலமே மக்கள் பணத்தில் சுமார் 30 லட்சம் ரூபா தில்லுமுல்லுகள் மூலம் வெளியேற்றப்பட்டால் இங்கு மக்களுக்கு என்ன போய்ச் சேரும்?



இலங்கை நாட்டின் ஜனாதிபதியின் வருகையை ஒட்டியே இத்தனை தில்லுமுல்லுகள் என்றால் பெரிய திட்டங்களில் பெருமளவு நிதிகையாளப்படும் திட்டங்களில் எவ்வளவு தில்லுமுல்லுகள், மோசடிகள், ஊழல்கள் நடக்கக்கூடும்?



இதைத் தடுக்க இன்று யாழ்ப்பாணம் வரும் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பாரா? இந்தக் "கட்டவுட்" விடயத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை மக்கள் அறிய விசாரணைக் குழு ஒன்றை அவர் நியமிப்பாரா? இப்படி மக்கள் பணத்தைச் சூறையாடும் பெருச்சாளிகளை பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பாரா? அத்தகைய பெருச்சாளிகள் தன்னுடன் கூடவே இருக்கவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கும் அரசின் உயர் மட்டங்களின் நோக்கங்கள் குறித்து ஆராய்வாரா? இந்தத் தில்லுமுல்லில் தொடர்புபட்டிருந்தவர்கள் இதன் மூலம் எவ்வளவு லாபமடைந்தார்கள் என்பது வெளிப்படுத்தப்படுமா?
கருத்துகள் | | Read More...

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு வெளியிட்டது போலியான குறுந்தகடு: திருமாவளவன்

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 10 பிப்ரவரி, 2012 | 3:38 PM

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012


விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு போலியான குறுந்தகடை வெளியிட்டுள்ளது என்று திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் 1 மணி நேரம் மட்டும் தான் மின்வெட்டு இருந்தது.

ஆனால் இப்போது பல மணி நேரம் மின்வெட்டு உள்ளது. அப்போது மின்வெட்டு குறித்து கேள்வி எழுப்பியவர்கள் இப்போது எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ளனர்.

எனினும் மின்வெட்டு குறித்து வாய்திறக்காமல் உள்ளனர் என்றார். மேலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு போலியான குறுந்தகடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வரஉள்ளது. அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே இவ்வாறு இலங்கை அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையும் - யதீந்திரா


[சென்னையில் இருந்து வெளிவரும் 'காக்கைச் சிறகினிலே..' இலக்கிய மாத இதழில் [பெப். 2012] அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான யதீந்திரா எழுதிய கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி எமது தளத்தில் மீள் பிரசுரம் செய்கிறோம்.]

இந்தியாவின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட்டதன் விளைவாகவே 1987ல் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையீடு செய்தது அல்லது இந்தியா கொழும்பைத் தண்டித்தது. இந்த அனுபவத்தையே கொழும்பு தனது பிற்கால வெளியுறவுக் கொள்கை நெறிக்கான பாலபாடமாகவும் பற்றிக்கொண்டது.

01.

இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தன்னைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறதென்றால், அதற்கு இராஜதந்திரம் தேவை - இது பேராசிரியர் இந்திரபாலாவின் கருத்து.

கொழும்பின் இராஜதந்திர அணுகுமுறைகள் குறித்து பலரும் அவ்வப்போது வியந்து பேசியிருக்கின்றனர். இது பற்றி அதிகம் தமிழில் பேசியவர், ஈழத்தின் மூத்த, முன்னணி அரசறிவியலாளரான மு.திருநாவுக்கரசு ஆவார். கொழும்பின் இராஜதந்திரம் பற்றிய அவதானங்கள் எவையுமே மிகைப்படுத்தல்களல்ல. ஆனால் இந்த இராஜதந்திரத்தின் அடிப்படையாக இருப்பது எங்கள் பக்கத் தவறுகள் தான், என்பதை புரிந்து கொள்வதில்தான், ஈழத்தமிழ்த் தேசியவாதிகள் என்போரும், அந்தத் தேசியவாதிகளின் கருத்துக்களை மறுப்பின்றி ஆமோதித்து வரும் தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள் என்போரும் தொடர்ந்தும் தடுமாற்றங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு முதிர்ச்சியற்ற போக்கே தொடர்கிறது.

90களுக்குப் பின்னரான இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை எடுத்து நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும், அது கொழும்பு, இந்தியாவை அச்சாணியாகக் கொண்டே தனது அனைத்துலக உறவுகளைத் திட்ட மிட்டு வருகிறது என்பதுதான். 90களுக்கு பின்னரான இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்பதே ஒரு இந்திய முதன்மைவாத கொள்கைதான். ஆனால் இலங்கையின் இத்தகைய நகர்வு, இந்தியாவின் மீதான விசுவாசத்தின் வெளிப்பாடல்ல, மாறாக தெற்காசியாவில் இந்தியாவின் [Inevitable factor] தவிர்க்க முடியாத இடத்தை ஆழமாகப் புரிந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடாகும்.

இந்தியாவை முன்னிலைப் படுத்தித்தான் கொழும்பு தனது ஒவ்வொரு மூலோபாய நகர்வுகளையும் முன்னெடுத்து வருகிறது. இதனை கொழும்பு தனது கடந்தகால பட்டறிவிலிருந்தே உள்வாங்கிக் கொண்டது. இந்தியாவின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட்டதன் விளைவாகவே 1987ல் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையீடு செய்தது அல்லது இந்தியா கொழும்பைத் தண்டித்தது. இந்த அனுபவத்தையே கொழும்பு தனது பிற்கால வெளியுறவுக் கொள்கை நெறிக்கான பாலபாடமாகவும் பற்றிக்கொண்டது.

கொழும்பின் ஆளும் பிரிவு, தங்களது ஒவ்வொரு மூலோபாய நகர்வுகளிலும் மிக நுட்பமாக இந்திய முதன்மை வாதத்தை உள்ளெடுத்துக் கொள்கிறது. இந்தியா பின்வாங்கும் போது, அதனைக் காரணம் காட்டியே இந்தியாவுடன் முரண்படும் சீனா, பாகிஸ்தான் போன்ற சக்திகளை அரவணைத்துக் கொள்கிறது. கொழும்பின் இவ்வகை இராஜதந்திர அணுகுமுறையானது, சதா கொழும்பை அவதானித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது. இது - கொழும்பின் கடந்த இருபதாண்டுகால இராஜதந்திர நகர்வுகளுக்கு கிடைத்த மிக முன்னேறிய வெற்றியாகும்.

இந்தியா 1987ல் நேரடியாக தலையிட்ட போது, அது எவ்வாறு நீண்டகால நோக்கில் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையக்கூடுமென்பதை ஆழமாகப் புரிந்து கொண்டிருந்த ஒரு சிங்களத் தலைவரென்றால், அது இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசா என்பதில் சந்தேகமில்லை.

உண்மையில் சிங்கள மக்கள் கோவில் கட்டிக் கும்பிட வேண்டிய தலைவரும் பிரேமதாசாதான். அதற்கான அடித்தளத்தைப் பிரேமதாசவின், அரசியல் வழிகாட்டியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே உருவாக்கிக் கொடுத்திருந்தார். ஜே.ஆர். வேறு வழியில்லாமல் இந்தியாவுடன் உடன்பட வேண்டியேற்பட்டாலும், புலிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை மதிப்பிட்டிருப்பார் என்பதில் ஜயமில்லை.

புலிகள்-இந்திய மோதலை பிரேமதாச நுட்பமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஈழத் தமிழரின் பக்கமாக இருக்க வேண்டிய இந்தியாவை ஈழத் தமிழரைக் கொண்டே அப்புறப்படுத்தும் தந்திரோபாயத்தில் கொழும்பு வெற்றிபெற்றது. இந்த இடத்தில்தான் புலிகள் தவறிழைத்தனர்.

இந்த நேரத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு புலிகளின் பதிலோ இவ்வாறு அமைந்திருந்தது - இது, இருதரப்புக்குமான [Convegence of Interest] பொதுவான நலன்சார் முடிவாகும். இது மாவோ சேதுங்குக்கும் - சியாங்கை ஷேக்கிற்கும் இடையிலான உடன்பாட்டிற்கு ஒப்பானது.

ஆனால் இந்த நகர்வில் நன்மையடைந்தது கொழும்பேயன்றி தமிழர்களல்ல. பிரேமதாசவைக் கொலை செய்ததன் ஊடாக தாங்களே வெற்றி பெற்றதான ஒரு தோற்றப்பாட்டை வெகுசனப்படுத்துவதில் புலிகள் வெற்றிபெற்றனர். ஆனால் உண்மையில் ஈழத் தமிழர்களின் நலனில் நின்று நோக்கினால் இது ஒரு மிகப் பெரிய பின்னடைவாகும். ஒரு வரலாற்றுத் தவறாகும். அந்தத் தவறுதான் இன்றைய ஈழத் தமிழரின் அனைத்து அவலத்திற்கும் காரணமாகும்.

02.

இந்தியாவின் கேந்திர முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு, ஈழத் தமிழரின் உரிமைத் தொடர்பில் குரலெழுப்பி வரும் அனைத்துத் தரப்பினருக்கும் உண்டு. ஆனால் துரதிஸ்டவசமாக கடந்தகாலம் என்னும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கு நம்மில் அனேகர் விரும்பாததால், இது குறித்து ஒரு வகையான தயக்கமும் தடுமாற்றமுமே எஞ்சியிருக்கிறது.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான புவியியல் சார் தொடர்புகள் எத்தகைய நிலையில் இருந்திருக்கிறது என்பதைத் தெளிவு படுத்துவதற்கு காலனித்துவ காலத்தில் நிகழ்ந்த ஒரு சில விடயங்களை இங்கு எடுத்தாளுகின்றேன். இலங்கை தொடர்பில் இந்தியா எவ்வாறானதொரு வகிபங்கைக் கொண்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வதற்கான ஒரு உசாத்துணையாகவும் இவைகள் இருக்க முடியும்.

"இலங்கையின் கரையோர மாகாணங்களில் பரவிய தொற்று நோய் பிரித்தானியப் படைகளைப் பாதித்தது. குறிப்பாக 51ம் படைப் பிரிவில் மாத்திரம் 300 படை வீரர்கள் இறந்தார்கள். படைவீரர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து கொழும்பு கட்டளைத் தளபதி இந்திய அரசிற்கு அவசரசமான கடிதத்தை எழுதினார். திருகோணமலையில் ஏற்பட்டிருக்கும் படை வீரர்களின் பற்றாக்குறை திரு கோணமலையின் கோட்டையின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என இந்தியாவில் இருந்த பிரித்தானிய கட்டளைத் தளபதி தீர்மானித் ததைத் தொடர்ந்து 1803ல் Cap.Everard தலைமையில் சென்னையில் இருந்த 34ம் படையணி உடனடியாகத் திருகோணமலைக் கோட்டைக்குள் தங்க அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2 வங்காளச் சிப்பாய் படையணிகளும் திருகோணமலைக்குச் செல்லுமாறு பணிக்கப் பட்டது."

"1879 அசாதாரண வரட்சி யால் ஏற்பட்ட விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட அரபுக் கப்பல் Mohussan கல்கத்தாவில் இருந்து பெருந்தொகையான அரிசியுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது"

"1867 தம்பலகாம நில உடமையாளர்கள் விதை நெல் இல்லாமல் வறுமையில் காணப்பட்டார்கள். இதனால் திருகோணமலை அரச அதிபர் J.W.W. Birch வட்டியில்லாத விதை நெல் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தியாவில் இருந்து விதை நெல் கொண்டு வரும் திட்டத்தை சிபாரிசு செய்தார்" [காலனித்துவத் திருகோணமலை - கலாநிதி சரவணபவன்]

இந்தத் தகவல்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான புவிசார் தொடர்பை தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றன. எப்போதுமே இலங்கையில் ஒரு விடயம் என்றால் அதன் முதலாவது தொடர்பாளராக இந்தியாவே இருந்திருக்கிறது. இலங்கையில் இருந்த மன்னர்கள் தமக்கிடையிலான பிணக்குகளைத் தீர்ப்பதற்கு தென்னிந்திய மன்னர்களை அழைத்த வரலாறுதான் நம்மிடமுண்டு. நவீன அரசியலிலும் இதுதான் நடந்தது.

பனிப் போர் காலத்தில், இந்தியா சோவியத்யூனியனைச் சார்ந்திருந்தது. சோவியத் - அமெரிக்க பனிப் போர் காலமென்பது, பிறிதொரு வகையில் புதிய நாடுகளின் உருவாக்கத்திற்கு ஆதரவான காலமாகவும் இருந்தது. இந்த அரசியல் அலையின் வெளிப்பாடாகத்தான் மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விடுதலை அமைப்புகள் வேர்கொண்டன.

அவ்வாறு உருக்கொண்ட போராட்ட அமைப்புக்கள் அனைத்தும் சுதந்திர நாட்டிற்கான முழக்கத்தையே உயர்த்திப் பிடித்தன. இதன் காரணமாகத்தான் அநேகமான விடுதலைப் போராட்ட அமைப்புகள் தம்மை இடதுசாரிகளாகவும் அடையாளப்படுத்திக் கொண்டன.

இப்படியொரு பின்புலத்தில் தான் இலங்கையிலும் பல விடுதலைப் போராட்ட அமைப்புகள் வெளிக்கிளம்பின. இவற்றில் அனேகமானவை இடதுசாரித்துவ முழக்கங்களையே தாங்கியிருந்தன. அவ்வாறு தோற்றம் பெற்ற விடுதலை அமைப்புக்கள் அனைத்தும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை முன்னிறுத்தி தனிநாடு ஒன்றுக்காகவே போராடியுமிருந்தன.
இந்த இடத்தில் இதுவரை எவருமே உரையாடாத அல்லது பார்க்காத விடயமொன்றும் உண்டு. உண்மையில், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை அடிப்படையாக் கொண்டு மேலெழுந்த தனிநாட்டுக்கான பிரகடனம் என்பதே, இந்தியாவை கருத்தில் கொண்டு முன்வைக்கப் பட்ட ஒன்றுதான். இந்த விடயம் ஈழத்து மற்றும் தமிழ் நாட்டுச் சூழலில் இதுவரை ஆழமாக உரையாடப்பட்டிருக்கவில்லை. தமிழ் நாட்டின் ஈழ ஆதரவாளர்கள் என்போருக்கு இது ஒரு புதிய தகவலாகவே இருக்கும்.

1970களில் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று கூறிய, ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தந்தையாகக் கருதப்படும் எஸ்.ஜே.வி. செல்வ நாயகம், [தந்தை செல்வா] 1976ம் ஆண்டிலோ ஈழத் தமிழர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதற்கான பிரகடனத்தை முன்மொழிகின்றார்.

இதனைத் தொடர்ந்து 1977ல் இடம்பெற்ற தேர்தலில் அப்போது வடகிழக்கு வாழ் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழர் விடுதலைக் கூட்டணி பெருவாரியான வெற்றியும் பெறுகிறது. இதுவே பிரிந்து செல்வதற்கான மக்கள் ஆணையாகவும் கொள்ளப்பட்டது.

ஆனால் செல்வநாயகத்தின் மேற்படி நிலைப்பாடானது தெற்கின் சிங்களத் தலைவர்களை எச்சரிக்கும் நோக்கம் கொண்டதேயன்றி, அடிப்படையில் பிரிந்து சொல்லும் நிலைப்பாடல்ல என்று வாதிப்போரும் உண்டு. சிலர் இதனை, ஈழத் தமிழ் மக்களை உணர்வு நிலையில் ஒருங்கிணைக்கும் ஒரு தேர்தல் உத்தி என்றும் சொல்வதுண்டு.

ஆனால் 1970 இற்கும் 1976 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களை ஆராயும் போது, செல்வநாயகம் இந்தியாவைக் கருத்தில் கொண்டே பிரிவினைக் கோரிக்கையொன்றை முன்வைக்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார் என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது.

தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று கூறிய செல்வா, 1972,பெப்ரவரி-20ல் தமிழ்நாட்டிற்குச் சென்று காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கின்றார். தமிழ் மக்கள், பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி வருவதாகவும், அது ஒன்றே தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரேயொரு மார்க்கமென்றும் தங்களை நிர்பந்தித்து வருவதாகவும் மேற்படி சந்திப்பின் போது, செல்வா குறிப்பிடுகின்றார்.

இதனைத் தொடர்ந்து செல்வா, 1972 ஒக்டோபரில் தனது நாடாளுமன்றப் பதவியிலிருந்து விலகுகின்றா. செல்வாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் ஒரு உந்துசக்தியாக இருந்தது 1971இல் இடம்பெற்ற பங்களா தேசின் உருவாக்கமாகும். பங்களாதேசின் பிறப்பின் பின்னால் இந்தியா இருந்தது என்பதொன்றும் இரகசியமானதல்ல.

'பங்காளதேஸ் தனிநாடாகியமை தமிழரின் அரசியல் முன்நகர்வில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. சமஸ்டி நிலைப்பாட்டை கைவிட்டு, தனிநாட்டை பிரகடனம் செய்யும்படியான உத்தேவகத்தையும் ஏற்படுத்தியது' - கலாநிதி. ஏ.ஜே.வில்சன்.

மேலும் கலாநிதி வில்சன் பதிவு செய்திருக்கும் பிறிதொரு விடயம், இங்கு மிகுந்த முக்கியத்துமுடையதாகும் - தமிழ்நாட்டுத் தலைவர்களை சந்தித்த மேற்படி பெப்பிரவரியில், வடக்கின் கரையோரக் கிராமமான வல்வெட்டித்துறையில் அனைத்துக்கட்சிகளின் கூட்டமொன்று இடம்பெறுகிறது. காணி உரிமைகள், பிராந்தியரதியான சுயாட்சி, குடியேற்றக் கொள்கை மற்றும் தொழில் வாய்ப்புக்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான [Six-point formula] ஆறு அம்சக் கோரிக்கையொன்று அங்கு முன்மொழியப்பட்டது.

இது பங்களாதேசின் சுதந்திர யுத்தத்திற்கு முன்னர், [Sheikh Mujibur Rahuman] ஷேக் முஜிபுர் ரகுமானால் அரசியலமைப்புப் பேரவைக்கு சமர்பிக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை மீள்நினைவுபடுத்துவதாகவே இருந்தது.

மேற்படி தகவல்கள், செல்வநாயகம் இந்தியாவை கருத்தில் கொண்டே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார் என்ற முடிவுக்கு வருமாறு நம்மை நிர்பந்திக்கிறது. பங்களாதேசுக்கு உதவியது போன்று, இந்தியா ஈழத் தமிழர்களுக்கும் உதவ முன்வரும் என்னும் நம்பிக்கையே செல்வநாயகத்திடம் இருந்திருக்கிறது.

பங்களாதேஸ் சுதந்திர நாடாக உருவாகிய அதே 1971ல் இலங்கையின் தெற்குப் பகுதிகளில் ஜே.வி.பி எனப்படும் இடதுசாரி இளைஞர் குழு, அரசை வீழ்த்துவதற்கான கிளர்ச்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. மேற்படி ஜே.வி.பி இடதுசாரித்துவத்தையும், மாவோவின் இந்திய விரிவாக்கா முழக்கத்தையும் ஒருங்கே சுமந்து கொண்டிருந்த அமைப்பாகும்.

தெற்கில் மேலெழுந்திருக்கும் இந்திய எதிர்ப்பு வாதத்தை எதிர்கொள்ளும் நோக்கில். இந்திய ஆதரவு நிலையை வெளிப்படுத்திவரும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா பக்கபலமாக இருக்கும் என்னும் கணிப்பும் செல்வாவிடம் இருந்திருக்கக்கூடும்.

எனது சில ஊகங்களை கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையாண்டிருக்கிறேன். 1971 கிளர்ச்சியைக் கட்டுபடுத்துவதற்கு சிறிமாவோ அரசிற்கு இந்தியா உதவியது என்பதும் கவனிக்கத்தக்கது.

03.

1970களில் வேர்கொள்ளத் தொடங்கிய ஆயுத ரீதியான போராட்டச் சிந்தனைகள், படிப்படியாக ஈழத் தமிழர்களுக்கான போராட்டத்தை இளைஞர்களின் பக்கமாக இடம்மாற்றிக் கொண்டிருந்தது. அவ்வாறு தோற்றம் பெற்ற அனைத்து ஆயுத விடுதலை இயக்கங்களும் எஜ.ஜே.வி. செல்வநாயகத்தின் தமிழீழ முழக்கத்தையே தங்களது முழக்கமாகவும் வரித்துக் கொண்டன. அன்றைய சூழலில் சுமார் 32 ஆயுத ரீதியான அமைப்புகள் இயங்கியதாக சில பதிவுகள் கூறுகின்றன. அதில் முதன்மையான ஒரு சில அமைப்புகளும் பல்வேறு சிறு குழுக்களும் அடங்கும்.

ஜனநாயக அரசியல் தளத்தில் தனிநாட்டுக் கோரிக்கை வழிமொழியப்பட்ட அதே காலப்பகுதியில் இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றும் இடம் பெறுகின்றது. பெரும்பான்மை பலத்துடன் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான தாராளவாத நிலைப்பாடுகொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுகின்றது.

1977ல் செல்வநாயகம் [தேர்தலுக்கு முன்பதாக] இறக்கின்றார். செல்வநாயகத்திற்கு பிற்பட்ட அரசியல் என்பது செல்வநாயகத்தின் தமிழீழ முழக்கத்தை ஆயுதரீதியான விடுதலை அமைப்புகள் தத்தெடுத்துக் கொண்ட காலமாகவே கழிந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஏனைய பிரதான விடுதலை அமைப்புகளை பலவீனப்படுத்தி தடைசெய்ததைத் தொடர்ந்து, செல்வநாயகத்தின் தமிழீழ முழக்கத்தின் ஏகபோக உரித்தாளர்களாகினர். ஆனால் செல்வநாயகத்தின் நேரடி வாரிசுகளான கூட்டணித் தலைவர்களோ, தமிழீழக் கொள்கையை எப்போதோ கைவிட்டிருந்தனர்.

இந்தியாவை நம்பி முன்னிறுத்தப்பட்ட தமிழீழக் கோட்பாட்டை உண்மையிலேயே இந்தியா எவ்வாறு நோக்கியது?

இந்தியா தமிழீழ முழக்கத்தை தாங்கியிருந்த ஈழத்து ஆயுத இயக்கங்களுக்கு பயிற்சியளித்ததும், ஆயுதங்கள் வழங்கியதும், தமிழ் நாட்டில் சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதித்திருந்ததும், இந்தியா தமிழீழத்திற்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது உண்மைதான்.

இந்தியாவிடம் பயிற்சி பெற்ற இயக்கங்களிடமும் அத்தகையதொரு நம்பிக்கையே மேலோங்கியிருந்தது. ஆனால் இந்தியாவிடம் அப்படியான நிலைப்பாடு எதுவும் இருந்திருக்கவில்லை.

1987ல் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாக தலையீடு செய்த போது, இது வெள்ளிடைமலையானது. ஏனெனில் இலங்கை பாக்கிஸ்தான் அல்ல. ஆனால் இலங்கையை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்தது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வெளிவிவகாரக் கொள்கை இந்தியாவை எரிச்சலடையச் செய்தது. சோவியத் சார்பாக இயங்கிய இந்தியாவின் பிராந்திய நலன்கள், ஜே.ஆரின் மேற்கு சார்பான நிலைப்பாட்டால் அச்சுறுத்தலுக்குள்ளாவதாகவே இந்தியா கருதியது. இதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியா ஈழத் தமிழர் பிரச்சனையைக் கையில் எடுத்தது.

இது பற்றி கொழும்பின் ஆளும் பிரிவினரின் நெருங்கிய நண்பரும், தீவிரவாத நிபுணருமான ரொஹான் குணரத்தின பதிவு செய்திருக்கும் விடயமொன்று இங்கு எடுத்தாளத்தக்கது - நீங்கள் [Non alliance] அணிசாராப் பொறுப்பிற்கு வெளியில் செல்கின்றீர்கள். நீங்கள் [Voice of America] அமெரிக்க குரலான வானொலி நிலையத்திற்கு இடமளித்திருக்கின்றீர்கள். நீங்கள் திருகோணமலை துறைமுகத்தை, [American fleet] அமெரிக்கக் கடற்படைக்கு வழங்கியிருக்கின்றீர்கள், அங்கு [Oil storage] எண்ணெய் சேமிப்பு வசதிகள் இருக்கின்றது. நீங்கள் இஸ்ரேலிய நலன்பிரிவுக்கு இடமளித்திருக்கின்றீர்கள். நீங்கள் தென்னாப்பிரிக்க கூலிப்படையினர் வருவதற்கு அனுமதித்திருக்கின்றீர்கள். இவையெல்லாம் இந்திய நலன் களுக்கு இடையூறானவை - இந்திய வெளியக உளவுத் துறையான 'றோ'வின் நிறுவகத் தலைவரான, ஆர்.என்.காவோ தன்னிடம் இவ்வாறு கூறியதாக ரொஹான் பதிவு செய்திருக்கின்றார்.

இந்தப் பின்னணியில்தான் இந்தியா, கொழும்பை தனது வழிக்குக் கொண்டு வருவதற்காக இலங்கையின் வடகிழக்கில் கொதித்துக் கொண்டிருந்த இனப் பிரச்சனையைக் கையில் எடுத்தது. அதுவரைக்கும் இலங்கையின் உள்ளக விடயமாகக் கருதப்பட்ட தமிழர் பிரச்சனை, இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் இணைக்கப்பட்டது. எனவே இலங்கைப் பிரச்சனையை இந்திரா காந்தி கையில் எடுத்தமை என்பது, முழுக்க முழுக்க இந்திய நலன்களை இலக்காகக் கொண்டது என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமப்பட வேண்டிய தில்லை.

'இந்திராகாந்தி இலங்கையின் இனப்பிச்சனையை ஆகக் குறைந்தது தனது இரு இலக்குகளை அடையப் பயன்படுத்திக் கொண்டார் - முதலாவது ஜெயவர்த்தனவை இந்திய முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு ஆட்டுவித்தல், இரண்டாவது 1967ல் நழுவவிட்ட தமிழ் நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை நிலைநிறுத்தல். அகாலி தளத்தை நிலைகுலையச் செய்வதற்காக, இந்திராகாந்தி எவ்வாறு காலிஸ்தான் தீவிரவாத குழுவிற்கு ஆதரவு வழங்கினாரோ, அதனையொத்த அணுகுமுறையையே ஜெயவர்த்தன விடயத்திலும் கைக்கொண்டார். இந்தியாவின் பிராந்திய கொள்நெறிச் சட்டகத்திற்கு வெளியில் சென்று கொண்டிருந்த ஜெயவர்த்தனவிற்கு, பாடம் புகட்டுவதற்காக ஈழ விடுதலை இயக்கங்களை ஆதரிக்கும் முடிவை எடுத்தார் இந்திரா' - சங்கரன் கிருஸ்ணா.

தாயாரால் அடித்தளமிடப்பட்ட விடயத்தையே ராசீவ் காந்தி பொறுப்பேற்றார். ஒரு சில ஈழத் தேசியவாத ஆய்வாளர்கள் மிகைப்படுத்திச் சொல்வது போன்று, இந்திராகாந்தி இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது, என்பதெல்லாம் வெறும் மாயை என்பதே என் வாதம்.

அவ்வாறான மதிப்பீடுகள், இந்திய அமைதிப்படைக் காலத்தில் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களின் உந்துதல்களே யன்றி வேறில்லை. இந்திரா காந்தியும் சரி அவரது இடை வெளியை நிரப்பிய ராசீவ் காந்தியும் சரி, ஈழத் தமிழ் இயக்கங்களின் தனிநாட்டுக் கோரிக்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரித்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் அத்தகையதொரு உள்நோக்கம் கொண்டு இயங்கியதாக சிங்கள அடிப்படைவாதிகள் அளவுக்கதிகமாகவே பேசியிருக்கின்றனர்.

இதன் வெளிப்பாடு தான், கடற்படை அணிவகுப் பொன்றின் போது, படைச் சிப்பாய் ஒருவர் ராசீவ் காந்தியை தாக்க முற்பட்டிருந்தார். ஆனால் இலங்கையின் சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு நியாமான தீர்வு காணப்பட வேண்டுமென்னும் ஆர்வம் அவர் களிடம் இருந்தது. அது எவ்வாறு அமைய வேண்டுமென்பதை இந்தியாவே தீர்மானிக்கும் என்னும் முடிவும் அவர்களிடம் இருந்தது. குறிப்பாக ராசீவ் காந்தி 'இனப்பிரச்சனையை இழுத்தடிப்பதைவிட, அதற்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் நேர்மையான ஆர்வத்தைக் கொண்டிருந்தார்' - சங்கரன் கிருஸ்ணா.

04.

ராசீவ் காந்தியின் ஆர்வத்திற்கும் பிரபாகரனின் ஆர்வத்திற்கும் இடையில் எவ்வாறான தொரு இடைவெளி இருந்தது என்பதுதான் பிற்கால அரசியலானது. இந்தியாவின் பிராந்திய அக்கறைகளை விளங்கிக் கொண்டு முடிவுகளை எடுக்கும் ஆற்றல் விடுதலைப்புலிகளிடம் இருந்திருக்கவில்லை. புலிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற அணுகு முறையானது இறுதியில், இந்திய ஆளும் பிரிவினருடன் ஒரு தீராப் பகையை தோற்றுவிப்பதாக முடிவுற்றது.

இந்தியாவை வெளி யேற்றுவதில் பிரேமதாசவுடன் பொதுநலன்சார் இணக்கப் பாட்டை ஏற்படுத்திக் கொண்ட பிரபாகரன், அத்தகையதொரு இணக்கப்பாட்டை ராசீவ் காந்தியுடன் ஏற்படுத்திக் கொள்ள முன்வராததுதான் அனைத்துப் பிரச்சனைகளினதும் அடிப்படையாக இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் விடயத்தில் ராசீவ்காந்தி கடும் போக்காளராக இருந்திருக்க வில்லை. ஆனால் காலப் போக்கில் அத்தகையதொரு நிலையை நோக்கி முன்னகர வேண்டிய நிலைக்கு ராசீவ் தள்ளப்பட்டார்.

மிக இளம் வயதில், இந்தியாவின் சர்வவல்லமை பொருந்திய நபராக வெளித்தெரிந்த ராசீவ் காந்தியின் அயலுறவு தொடர்பான முதலா வது நகர்வே தோல்வியில் முடிவடைவதை ராஜீவால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு சில தேசியவாத எழுத்தாளர்கள் மிகைப்படுத்துவது போன்று புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டுமென்னும் எண்ணம் இந்தியாவிற்கு இருந்திருக்கவில்லை. ஆனால் புலிகளைப் பலவீனப்படுத்தாமல் தாங்கள் விரும்பும் ஒரு அரசியல் இணக்கப் பாட்டை ஏற்படுத்த முடியாதென்ற நிலைமை இருந்தது.

ஒரு நாட்டின் வெளி விவகாரக் கொள்கை என்பது, அந்த நாட்டின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும். எந்தவொரு நாடும் தனது நலன்களைப் புறம்தள்ளி விட்டு பிறிதொரு நாட்டிற்கு அல்லது அமைப்புகளுக்கு உதவுவதில்லை. இது ஒரு சாதாரண வெளிவகார உண்மையும் கூட. இந்த அடிப்படையில்தான் இந்தியத் தலையீட்டின் அரசியலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா தனது பிராந்திய நலன்களை முன்னிறுத்தியே எங்களைக் கையாண்டது. ஆனால் நாங்கள் எங்களது நலன்களில் நின்று இந்தியாவைக் கையாண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஆர்வங்களுடன் எங்களது நலன்களை எவ்வாறு பொருத்துவது என்னும் சூட்சுமம் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இந்திய அமைதிப் படைக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எவற்றையும் நான் இங்கு நியாயப்படுத்தவில்லை. ஆனால் எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டிற்கும் ஒரு படிமுறைசார்ந்த வளர்ச்சிப் போக்கிருக்கிறது. கிடைக்கும் சந்தர்ப்பங்களை கையாண்டு, அவற்றின் போதாமையை நடைமுறை ரீதியாக நிரூபித்து முன்னேறுவதே சரியானதொரு அரசியல் அணுகுமுறையாகும். ஆனால் இந்தியாவின் நேரடித் தலையீட்டின் போது அத்தகையதொரு அரசியல் முதிர்ச்சியை புலிகள் காட்டியிருக்கவில்லை.

'விடுதலைப்புலிகளின் தேவை ஒரு நடைமுறைசார் அரசு என்றால், அது குறித்தும் நான் பேசத் தயாராக இருக்கின்றேன் என்று ராசீவ் முரசொலி மாறனிடம் கூறியிருக்கின்றார். ஆனால் விடுதலைப்புலிகள் இந்தியா விற்குப் போதுமான கால அவகாசத்தைக் கொடுத்திருக்க வில்லை. மகாணசபை முறைமை ஈழத் தமிழர் உரிமைகளை நிறைவுசெய்யப் போதுமானதல்ல என்பதை இந்தியாவை வைத்துக் கொண்டே நாம் நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால் பிரபாகரனோ இந்தியாவை அரசியல் அரங்கிலிருந்து வெளி யேற்றுவதன் மூலம் தனது இலக்கை அடையமுடியுமென்று நம்பினார்' - டி.பி.எஸ். ஜெயராஜ்.

மிகச் சிறியதொரு அணியான விடுதலைப்புலிகள் அமைப்பு, தெற்காசியாவின் பலம்பொருந்திய இந்தியாவின் படைகளை இராணுவ ரீதியாக எதிர்கொண்டமையானது, வெகுசனங்கள் மத்தியிலும் ஒரு கிளர்ச்சியூட்டக் கூடிய உளவியலை கட்டமைத்தது. விடுதலைப் புலிகளிடமும் அத்தகையதொரு பார்வையே இருந்தது. இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பினால் என்ன செய்வீர்கள் - என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில், புலிகள் ஒருவகை துணிகர உளவியலால் பீடிக்கப்பட்டிக்கின்றனர் என்பதையே காட்டியது - தமிழீழ விடுதலைப்புலிகள் வலிமைவாய்ந்த 100,000 இந்தியப் படைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். எனவே இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ளுவதென்பது சிக்கலாக இருக்காது.

எனது கணிப்பில் விடுதலைப் புலிகளிடம் இராணுவவாதம் மேலோங்கி, அரசியல் உபாயங்கள் மீதான நம்பிக்கை கடைநிலைக்குச் செல்வதில் மேற்படி சம்பவமே முக்கியப் பங்காற்றியது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு தன்னால் ஒரு தமிழீழத்தை எடுக்க முடியுமென்னும் நம்பிக்கையும் பிரபாகரனுக்குள் குடிகொள்ளவும் இதுவே காரணமாகியது எனலாம்.

பிற்காலத்தில் அவர் இலங்கை அரசுக்கு எதிராகப் பெற்றுவந்த இராணுவ வெற்றிகளும் அவரை மீளமுடியாதவாறான இராணுவ மனோநிலைக்குள் சிறைப்படுத்தியது.

ஆனால் இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு அல்லது இந்தியாவை ஓரங்கட்டிக் கொண்டு ஒரு தீர்வை ஈழத் தமிழர்கள் பெறமுடியாது, என்பதையே கடந்தகால வரலாறு தெட்டத் தெளிவாக நிரூபித்திருக்கிறது. கொழும்பு இந்த விடயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

பிரபாகரன் இந்தியாவை தவிர்த்துச் சிந்திக்க, கொழும்போ இந்தியாவை முதன்மைப்படுத்தி தனது அயலுறவைத் திட்டமிட்டது. எங்களது தவறுகளால் வெளித்தெரிந்த இடைவெளியை கொழும்பு தனது இராஜதந்திர அணுகுமுறைக்குப் பயன்படுத்திக் கொண்டது.

"பிரதமர் ராசீவ்காந்தி தெற்காசியக் கப்பலின் கேப்டன். அவர் அழைத்துச் செல்லும் இடத்திற்குத்தான் நாங்கள் செல்வோம். அவரையும் இந்தியாவையும் பொருத்துத்தான் எல்லாம். ஆனால் அவர் எங்களைச் சரியான திசையில் அழைத்துச் செல்கிறாரா என்பதுதான் என் கவலை"- 1985ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரும், இந்திரா காந்தியின் நன்பருமான குல்திப் நய்யாரிடம் குறிப்பிட்டவைகளே இவை.

ஜெயவர்த்தனவின் புரிதல் இவ்வாறிருக்க. பிரபாகரனின் பார்வையோ கேப்டனை இல்லாமலாக்கிவிட்டால், தெற்காசியக் கப்பல் வேறு பக்கம் போவிடும் என்பதாக இருந்தது. இதுவே பிரபாகரன் பின்னர் ஒரு வலாற்றுத் தவறை நோக்கிப் பணிக்கவும் காரணமாகியது

05.

இன்று ஒரு புதிய சூழல் உருவாகியிருக்கிறது. எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது முற்றிலும் புதியதொரு சூழல் என்பதுதான் உண்மை. இதுவரைக்கும் இந்திய மத்திய அரசிற்கு எது பகையுணர்வுமிக்க நெருக்கடியாக இருந்ததோ அது இப்போது இல்லை. ஈழத் தமிழ் அரசியல் சக்திகள் இந்தியாவையும். இந்தியா ஈழத்தமிழ் சக்திகளையும் அணுகுவதில் இருந்த தடைகளும் இப்போது இல்லை. எனவே இந்தப் புதிய சூழலை ஈழத்தமிழ் அரசியல் சக்திகளும், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் தமிழ் நாட்டின் ஆதரவு சக்திகளும் எவ்வாறு கையாளாப் போகின்றனர் என்பதுதான் கேள்வி.

நமது இச்சைகளில் இருந்து அரசியலைப் பார்க்காமல், சூழலில் இருந்து அரசியலைப் பார்க்கும் அணுகுமுறையொன்று நமக்குத் தேவைப்படுகிறது. 1987ல் இருந்த இந்தியாவல்ல இப்போது இருப்பது. 90களில் இருந்த உலகமல்ல இப்போது இருப்பது. அன்று [ஜெயவர்தனாவின்] எந்த அணுகு முறையை இந்தியா பிரச்சனையாகப் பார்த்ததோ, அத்தகைய பிரச்சனைகள் எவையும் இன்றைய இந்தியாவிற்கு பிரச்சனையான விடயங்களல்ல. சோவியத் சார்பு நிலை பிராந்தியக் கொள்கையல்ல இப்போதைய இந்தியாவின் கொள்கை.

சமீபகாலமாக அமெரிக்கா கொழும்பின் மீது, குறிப்பாக அரசின் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து அழுத்தங்களை வெளியிட்டுவருவதை இந்தப் பின்னணியிலேயே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கொழும்புடனான சீன நெருக்கம் இந்திய-அமெரிக்க மூலோபாய நலன்களுக்குக் குந்தகமாக இருக்கிறது. ஏனெனில் இது நிக்சன் காலத்து சீனாவல்ல. எனவே எதிர்காலத்தில் இலங்கை பல்வேறு முரண்பாடுகளின் களமாக மாறக் கூடும். இத்தகைய மாற்றங்களுக்கு ஊடாகவெல்லாம் பயணிக்க வேண்டிய நிலையில் தான் இன்றைய ஈழத் தமிழர் அரசியல் இருக்கிறது.

கொழும்பின், சீனா-பாகிஸ்தானிய உறவு நிச்சயமாக இந்தியாவின் விருப்புக்குரிய ஒன்றல்ல. அதே போன்று கொழும்பின் ஈரானிய உறவு அமெரிக்க விருப்புக்குரிய ஒன்றல்ல. கொழும்பின் சீன-பாகிஸ்தானிய உறவானது நிச்சயமாக இந்தியாவை ஒருவகை நிதான நிலைக்குள் முடக்கிவைக்கும் சாணக்கியமாகும். ஆனால் அமெரிக்காவை எந்தவொரு வரையறைக்குள்ளும் முடக்க முடியாது. இப்படியான பல்வேறு விடயங்களை நாம் பரிசீலிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

சிலர் விவாதிப்பது போன்று ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் இந்தியா 87இற்குத் திரும்ப முடியாது. ஆனால் இந்தியாவிற்கு ஒரு தீர்வு குறித்து அழுத்தத்தை கொடுப்பதற்கான கடப்பாடுண்டு. அந்தக் கடப்பாட்டை யார் வலியுறுத்துவது.

உலகிலேயே ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஆற்றல் தமிழ் நாட்டிற்கு மட்டுமே உண்டு. இதற்கு முதலில் கடந்த கால வரலாற்றிலிருந்து நாம் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியாவின் பிராந்திய நலன்களை புறம்தள்ளும் வகையிலான அரசியலை கைவிட்டு, அவற்றுடன் ஒத்திசைந்து போய் எவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியுமென்று பார்க்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னிறுத்திய அரசியலை கைவிட்டு, புதிய நிலைமைகளுக்கு ஏற்றதான அரசியலை முன்னிறுத்த வேண்டும். புலிகளை முதன்மைப்படுத்திக் கொண்டு இந்திய மத்திய அரசை அணுக முடியாது, குறிப்பாக காங்கிரஸ் இந்தியாவை அணுக முடியாது.

இந்திய மத்தியரசு எந்தெந்த விடயங்களில் இலங்கை தொடர்பாக கரிசனை கொள்கின்றதோ அதனை அமுல்படுத்துவதற்கான அழுத்த அரசியலை மேற்கொள்ள வேண்டும். கவனிக்க. அழுத்த அரசியல் என்பது எதிர்ப்பரசியல் அல்ல.

தமிழ் நாட்டில் இருந்து எழும் அழுத்தங்கள், ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்குள்ள கடப்பாட்டை வலியுறுத்துவதாக அமைய வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களின் வழியாக மட்டுமே அரசியலை நோக்குவோமாயின், அது நம்மை மேலும் தனிமைப்படுத்தவே வழிவகுக்கும்.

இந்த இடத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஈழ ஆதரவு சக்திகளின் உணர்ச்சி வசப்பட்ட அரசியல் புரிதலிலுள்ள சிக்கல்கள் தனித்துப் பார்க்கப்பட வேண்டியவை. இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இந்தியாவினை எவ்வாறு பார்க்க வேண்டும், கடந்தகாலத்தில் இந்தியாவைக் கையாளுவதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் விட்ட தவறுகளின் தாக்கம் எத்தகையது, இன்றைய புதிய அரசியல் சூழலும் அது வெளிப்படுத்தியிருக்கும் புதிய வாய்ப்புக்களும், அவற்றை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை இங்கு பதிவு செய்திருக்கின்றேன்.

இது விரிவான ஆய்வுக்குரிய ஒன்றாகும். அத்தகைய ஆய்வொன்றை நோக்கிச் செல்வதற்கான முன்வரைபுக் குறிப்புக்களாக இவற்றைக் கையாள முடியும்.

'கடந்த காலத்தின் தவறுகளை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டிய காலமிது' -ஜோர்ஜ் சத்நயணா.
கருத்துகள் | | Read More...

புலிகளுக்கு நீர்மூழ்கி தொழில்நுட்பத்தை வாங்க முற்பட்ட கனேடியத் தமிழர்

Penulis : ۞உழவன்۞ on வியாழன், 9 பிப்ரவரி, 2012 | 9:06 AM

வியாழன், 9 பிப்ரவரி, 2012

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பொருள் உதவி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒன்ராரியோவை வசிப்பிடமாகக் கொண்ட ரமணன் மயில்வாகனம் என்பவர், 2006ம் ஆண்டில், விடுதலைப் புலிகளுக்கு நீர்மூழ்கி வடிவமைப்பு தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் இரவுப்பார்வை கருவிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

இவர் நேற்று நியுயோர்க் புறூக்லின் மாவட்ட நீதியாளர் முன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து ஆகக்கூடியது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

கனேடிய குடியுரிமை பெற்றவரான 35 வயதான மயில்வாகனம் ரமணன் முன்னர் அமெரிக்காவில் வசித்து வந்தவராவார்.

2009ம் ஆண்டில் கனேடிய அதிகாரிகளால் ரொரன்ரோவில் கைது செய்யப்பட்ட அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

22,000 டொலர் பெறுமதியான நீர்மூழ்கி வடிவமைப்பு மென்பொருளை இவர் பிரித்தானிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்காக கொள்வனவு செய்ய முயன்றதாகவும், கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் இருந்து புலிகளுக்காக இரவுப்பார்வைக் கருவிகளை வாங்க முற்பட்டதாகவும் ரமணன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு கணினி கருவிகள், இலத்திரனியல் பொருட்கள், தொடர்பாடல் கருவிகள் போன்றவற்றை வாங்க உதவியதாகவும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் | | Read More...

கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி

Penulis : ۞உழவன்۞ on புதன், 8 பிப்ரவரி, 2012 | 5:53 AM

புதன், 8 பிப்ரவரி, 2012


ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் கடந்த திங்களன்று இரவு கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலைப்பார்த்தவர்கள்.

கள்ளசாராயத்தை குடித்தவுடன் அவர்களுக்கு பயங்கரமான நெஞ்சு வலியும் கண் வலியும் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்து நாட்டு சாராயத்தில் கலக்கப்பட்டிருந்தது தான் இதற்கு காரணம் என்று மாவட்ட ஆட்சியர் கிரிஷ் கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் | | Read More...

நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல்


நோர்வேயில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை வெளியான விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்துடன் தொடர்பு கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள் இந்த அஞ்சல்தலைகளை தடைசெய்வது தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சுடனும் அந்த நாட்டின் அஞ்சல், தொலைத்தொடர்புத் துறையுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்ட போது, சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், நோர்வே இதற்கு அனுமதி வழங்கியது குறித்து சிறிலங்கா அரசு தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கருத்துகள் | | Read More...

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுவெட்டு வெளியிடும் பாதுகாப்பு அமைச்சு


தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு இன்று விசேட இறுவட்டு ஒன்றை வெளியீடு செய்ய உள்ளது.


வன்னிப் போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மக்களுக்கு இழைத்த அநீதிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் இந்த இறுவட்டு வெளியிடப்படுகின்றது.

வன்னி மக்களின் ஆதாரங்களுடன் இந்த இறுவட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை, மதகுருமார் மீது தாக்குதல் நடத்தியமை, தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் இந்த இறுவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

போரின் இறுதி நாட்களில் புலிகள் மேற்கொண்ட கொலைகள் தொடர்பில் பிரதேச மக்களே சாட்சியமளித்துள்ளனர்.

இந்த இறுவட்டை சர்வதேச புலி வலையமைப்பின் பிரச்சாரங்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என பாதுகாப்பு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் | | Read More...

தமிழரின் தாயகக் கோட்பாட்டை நிராகரித்தார் சிறிலங்கா அதிபர்

Penulis : ۞உழவன்۞ on சனி, 4 பிப்ரவரி, 2012 | 11:39 AM

சனி, 4 பிப்ரவரி, 2012


வடக்கு, கிழக்கு தமிழரின் தனித்துவமான தாயகம் என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் வகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவின் 64 வது சுதந்திர நாள் நிகழ்வில் உரையாற்றியுள்ளார்.

சிறிலங்காவின் எந்தப் பகுதியும் எந்தவொரு இனத்துக்கும் சொந்தமானதல்ல என்றும் அனைத்துப் பகுதிகளும் அனைவருக்கும் சொந்தம் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரவில் இன்று காலை நடந்த இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய சிறிலங்கா அதிபர்,

சுதந்திரம் என்பது இன்று எமது முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். அதனைக் கட்டிக்காக்க வேண்டிய கடமை எம் அனைவருக்கும் உள்ளது.

யுத்தத்தைக் காரணம் காட்டி சுதந்திரத்தை மறக்கடித்த நிலைமை அன்று இருந்தது.

இன்று யுத்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மண்ணிலிருந்து சுதந்திரத்தைக் கொண்டாடும் அளவுக்கு நாம் வந்துள்ளோம்.

கிராமத்தைப் பாதுகாக்க பதுங்கு குழிகளையும் துப்பாக்கிகளையும் கேட்டிருந்த மக்கள் இன்று அபிவிருத்தி, சுதந்திரம் மற்றும் பரிசுத்தமான நாட்டை வேண்டி நிற்கின்றனர்.

எமக்கு எதிராக வெளிநாடுகளிலுள்ள பயங்கரவாத சக்திகள் பல்வேறு பொய்ப் பரப்புரைகளையும் சதி வலைகளையும் பின்னி வருகின்றன.

இங்குள்ள சிலரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

சில நாடுகளில் இடம்பெற்ற பிரிவினைவாதத்தினை சிறிலங்காக்குள்ளும் நடத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்துவது தனியொருவரினால் செய்யக்கூடியது அல்ல.

அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த உண்மையை புரிந்துகொள்ளவும் வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து உதவிகளைப் பெறுபவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டுக்கும் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் பொதுவான நிரந்தரமான சமாதானக் கொள்கையொன்றை ஏற்படுத்த வேண்டும்.

சிறிலங்காவில் எந்தவொரு பிரதேசமும் எந்தவொரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. முழுநாடுமே எல்லோருக்கும் எல்லாம் பொதுவானது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கடந்தகால பிரச்சினைகளுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தது.

எமது மனசாட்சியின்படி நாம் அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த டிசம்பர் மாதம் 17ம் நாள் இந்த ஆணைக்குழு தனது பரிந்துரைகளை வெளியிட்டது.

அதன் பரிந்துரைகளை ஏற்று குறுகிய காலத்திற்குள். அதாவது கடந்த 6 வார காலங்களாக நாம் அவற்றை நிறைவேற்றியே வருகின்றோம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்போது பொதுமக்களின் வாக்குகளால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தினை ஒதுக்கி வைத்து விட எம்மால் முடியாது.

நாட்டின் நீதி, சட்டம் அனைத்துக்கும் நாம் அடிபணிவது போன்றே ஜனநாயக சக்தியான நாடாளுமன்றுக்கும் நாம் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும்.

பொதுமக்களின் வாக்குகளினால் மாத்திரமே ஓர் அரசாங்கத்தினை கவிழ்க்கும் கட்டுப்பாட்டுக்குள் நாம் உள்ளோம். அதை நாம் பாதுகாக்க வேண்டும்.

அந்தவகையில் ஜனநாயக நீரோட்டத்தில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு மாத்திரமே உண்டு.

இதில் கலந்துகொண்டு அனைத்து பிரச்சினைகள் குறித்தும் செவிமடுத்து, மக்கள் தேவைகளை கவனத்திற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உண்டு.

எனவே அனைத்து கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெற்று தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.,“ என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

மாடு வாங்கப் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்! மட்டக்களப்பில் சம்பவம்!


அம்பாறை கல்முனைக்குடியிலிருந்து மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திற்கு கடந்த வியாழக்கிழமை ஒரு இலட்சத்து 35ஆயிரம் ரூபா பணத்துடன் மாடு வியாபாரத்திற்கு சென்றவர் இன்று பிற்பகல் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கறுத்த பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நாகூர்பிச்சை (வயது -50) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் சென்ற மோட்டார் சைக்கிள் இன்று காலை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள றாணமடு 10ஆம் கொலனி சந்தியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் நெஞ்சுப்பகுதியில் மூன்று கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும், சடலத்தின் கால் பகுதியை முதலை கடித்துள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சடலம் பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் | | Read More...

ஹிலாரி கொடுத்த ‘பேதி‘யால் சிறிலங்கா கலக்கம் – பணிந்து போக முடிவு?

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 3 பிப்ரவரி, 2012 | 1:48 AM

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதா இல்லையா என்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என்று கூறியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டிலேயே சிறிலங்காவின் பதில் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா சர்ச்சைக்குரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஏற்கனவே வெளியாகி விட்டது அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை உலகமே அறியும். இந்தநிலையில் இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமா என்பது குறித்து அரசாங்கம் ஆராயும்.“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தவாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரத்தைக் கையாளும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர், ஆணைக்குழுவின் அறிக்கை ஜெனிவாவில் ஒருபோதும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தனர்.

அதற்கு முரணான வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அறிவித்திருப்பது சிறிலங்காவைப் பெரிதும் கலக்கத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து .அமெரிக்கா நீண்டகாலமாக கோரி வரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கும் நிலை உருவாகி வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள் | | Read More...

பாலியல் உறவால் வயோதிபருக்கு வந்த வினை _

விலைமாதுடனான பாலியல் உறவின் போது தன்னையறியாது செயற்கைப் பல் தொகுதியை விழுங்கியதில் 74 வயதுடைய வயோதிபரொருவர் மரணமடைந்த சம்பவமொன்று தாய்வானில் இடம்பெற்றுள்ளது.

பல வருடங்களாக மனைவியைப் பிரிந்த வாழும் மேற்படி வயோதிபர் தனது நெருங்கிய பெண் நண்பியொருவருடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவதினமன்று 62 வயதுடைய விலைமாது ஒருவருடன் சுமார் 30 நிமிடங்களைக் கழித்த பின்னர் விலைமாதுக்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டு ஆடைகளை அணிந்து கொண்டிருந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

மயக்கமடைந்த இவர் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் இறந்து விட்டதாகவும் செயற்கை பல் தொகுதி தொண்டையில் சிக்கியதனால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ___
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger